“தமிழ்நாடு மீது குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன் தங்கள் முதுகை பார்க்க வேண்டும்” - பாஜகவுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!
சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கொரட்டூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று(ஜூன்.10) நடைபெற்றது. திமுக துணை பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.
.கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாடு அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும். மணிப்பூரில் இன்னும் கலவரம் ஓயவில்லை. உத்திர பிரதேசத்தில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை.
ஆனால் தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் களத்தில் இருக்கிறார். எந்தவித குற்றச்சாட்டுகள் புகார்கள் என்றாலும் அவர் நேரடியாக முன் நின்று அவற்றைத் தீர்த்து வைக்கிறார். அதனால் தமிழ்நாட்டின் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்னர் பாஜக தங்கள் முதுகை பார்த்துக்கொள்ள வேண்டும். மணிப்பூர் கலவரத்தை மறைக்கவே கொங்கு மண்டலம் கொலைகள் குறித்து பாஜக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது” இவ்வாறு அவர் கூறினார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று தனது எக்ஸ் பதிவில் கொங்குப் பகுதிகளில் நடந்த மூதாட்டியின் கொலையை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசை விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.