"அரவிந்த கெஜ்ரிவாலை மிகப்பெரிய பயங்கரவாதியைப் போல் நடத்துகிறார்கள்" - பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு!
நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதியைப் போல் அரவிந்த கெஜ்ரிவாலை நடத்துகிறார்கள் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்தார்.
டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.
இதற்கிடையே 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், கடந்த மார்ச் 21-ம் தேதி கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை கைது செய்தனர். அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் முதலமைச்சருமான பகவந்த் மான் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"சிறையில் கடும் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள்கூட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வருத்தம் அளிக்கிறது. அவர் என்ன தவறு செய்தார்? நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதியை பிடித்தது போல் அவரை நடத்துகிறார்கள். பிரதமருக்கு என்ன வேண்டும்? வெளிப்படைத்தன்மை அரசியலை தொடங்கி பாஜகவின் அரசியலுக்கு முடிவு கட்டிய நேர்மையான அரவிந்த் கெஜ்ரிவால் இப்படி நடத்தப்படுகிறார்.
எப்படி இருக்கிறீர்கள் என்று கெஜ்ரிவாலிடம் கேட்டதற்கு, ”என்னை விடு, பஞ்சாப்பில் எல்லாம் நன்றாக உள்ளதா?” என்று கேட்டார். ஏனென்றால், நாங்கள் அரசியலை பணியாக செய்கிறோம். நாங்கள் கெஜ்ரிவாலுடன் நிற்கிறோம். மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் ஜூன் 4-ஆம் தேதி, ஆம் ஆத்மி மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவாகும்.”
இவ்வாறு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்தார்.