15 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஊர் சாத்திரை திருவிழா - உசிலம்பட்டியில் கோலாகலம்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராம ஊராட்சிக்குட்பட்ட தும்மக்குண்டு, பிச்சம்பட்டி, டி.பெருமாள்பட்டி, டி.பெருமாள்கோவில்பட்டி, உடையான்பட்டி, கரிசல்பட்டி, ரெட்டியபட்டி, போனிநாயக்கன்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட 9 கிராம மக்கள் ஒன்றிணைந்து 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை
கொண்டாடப்படும், ஊர் சாத்திரை திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
கடந்த 6 ஆம் தேதி துவங்கிய இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று பிச்சம்பட்டி கிராமத்தில் இருந்து 9 கிராமங்களுக்கும் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஊர்வலமாக வந்த 9 ஊர் முத்தாலம்மன் சிலைகளையும், தலையில் சுமந்தவாரு அந்த அந்த ஊர்களுக்கு வாணவேடிக்கை முழங்க கொண்டு சென்றனர்.
தொடர்ந்து அணைத்து கிராமங்களில் உள்ள முத்தாலம்மன் கோயில்களில் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும் எனவும், மீண்டும் இரவு 9 ஊர் சிலைகளும் தும்மக்குண்டு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் காங்கேயநத்தம் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு கொண்டு சென்று கரைக்கப்படும் என கூறப்படுகிறது.
15 ஆண்டுகளுக்கு ஒரு முறை 9 ஊர் மக்களுக்கும் விழா எடுக்க சாற்றுதல் எனப்படும் சொல் மறுவி ஊர் சாத்திரை என மாறியதாகவும், இத்திருவிழா எடுத்தால் மழை பெய்து 9 கிராமங்களும் செல்வ செலிப்பாகும் என்பது இந்த கிராமங்களின் ஐதீகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஊர் சாத்திரை திருவிழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முத்தாலம்மன் தரிசனம் பெற்றனர்.