“மும்மொழிக் கொள்கை இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சி” - அமைச்சர் அன்பில் மகேஸ்!
சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“மத்திய அமைச்சரின் கடிதம், தூண்டில் போட்டுவிட்டு அதில் மீன் ஏதாவது சிக்காதா? என்று பார்ப்பது போல் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக்கொள்கை பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், உயர் படிப்பறிவு விகிதத்தையும், கல்வி சாதனைகளையும் அளித்துள்ளது. சர்வதேச போட்டி திறனுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தியுள்ளது. இது மாணவர்களை மூன்றாவது மொழியால் அலைக்கழிக்காமல், கடந்த 50 ஆண்டுகளாக சமூகம் மற்றும் பொருளாதார மாற்றத்தை தந்துள்ளது.
அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பட்டியலின் கீழ் கல்வி இருப்பதால், மாநிலங்களில் தனித்துவமான மொழி மற்றும் பண்பாட்டு சூழலுக்கு ஏற்ப கொள்கைகளை வடிவமைக்க உரிமையளிக்கிறது. மூன்றாவது மொழியை திணிப்பது அரசியலமைப்பு சட்டத்தையும், மாநில உரிமையையும் மீறுகிறது.
மும்மொழிக் கொள்கை நெகிழ்வுத்தன்மையோடு இருக்கிறது என சொல்லப்பட்டாலும், தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சியாகவே அது பார்க்கப்படுகிறது; 1937, 1965-ம் ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களிலேயே வேரூன்றிய இந்த கவலை, தமிழ் அடையாளத்திற்கு எதிரான அத்துமீறலாக இருந்தது. இதை முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் எதிர்த்தனர். தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சரும் எதிர்க்கிறார்.
மும்மொழி கொள்கையை திணிப்பதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை சிக்கலை ஏற்படுத்தும். இது மாணவர்களை இந்தி கற்க வற்புறுத்தும் முறையாக அமைந்துவிடும். மாணவர்கள் ஆரம்பத்தில் குறைவான மொழிகளை கற்பது பயனளிக்கும் என ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள இருமொழிகொள்கை உள்ளூர் மட்டும் உலகலாவிய தேவைகளுக்கு போதுமானது. அதனால் மும்மொழி கொள்கையால் மாணவர்களிடையே மன அழுத்தத்தை ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்தி உட்பட பிற மொழிகளை கற்பதற்கு தடை செய்யவில்லை. ஆனால் இந்தி மொழி கற்பது கட்டாயம் என்று சொல்லும்போதுதான் அது மாணவர்களுக்கு சுமையைக் கொடுக்கும். மேலும் இடைநிற்றல் மாணவர்களை அதிகப்படுத்தும். இருமொழிகொள்ளையால் சாதனை புரியும் மாணவர்களை மூன்று மொழி கற்க சொல்வது சாதனை புரியவிடாமல் காலில் சங்கிலியை கட்டி ஓரமாக உட்கார வைக்கும் செயல். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் இருமொழிக்கொள்கையை ஆதரிக்கின்றன.
மூன்றாவது மொழி இல்லாதது வாய்ப்புகளை கட்டுப்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டாலும், தமிழ்நாட்டு மாணவர்கள் உலகளாவிய அளவில் சிறப்பாகவே உள்ளனர். நிதி அழுத்தம் அல்லது கொள்கை திணிப்புக்கு பதிலாக தமிழ்நாடு கூட்டாட்சி ஒத்துழைப்பை விரும்புகிறது. ஒருமைப்பாட்டைவிட பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவேண்டும்”
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.