“பழங்குடியின மாணவர்கள் ஐஐடி, என்ஐடி ஆகிய உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான பயிற்சி திட்டம் கைவிடப்பட்டது” - தாட்கோ தகவல்!
தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மாணவர்கள் உயர்கல்விகள் பயில்வதற்க்காக ஆண்டுதோறும் 50 பழங்குடியின மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஐஐடி மற்றும் என்ஐடி ஆகிய உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்ந்து பயில சிறப்பு பயிற்சி அளிக்க 1 கோடி ரூபாய் நிதியுதவியுடன் 2013 ஆம் ஆண்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.
ஐஐடி மற்றும் என்ஐடி ஆகிய உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் பழங்குடியின மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் கார்த்திக் என்பவர் பழங்குடியின மாணவர்கள் ஐஐடி மற்றும் என்ஐடி ஆகிய உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்ந்து பயில போட்டி தேர்வு பயிற்சி திட்டம் குறித்து தகவல்களை கேட்டு தாட்கோ தலைமை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கேட்கப்பட்ட அவரின் கேள்விகளுக்கு தாட்கோ பதிலளித்ததாவது, “தாட்கோ மூலம் 2013 ஆம் ஆண்டு ஐஐடி மற்றும் என்ஐடி ஆகிய உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்ந்து பயில போட்டி தேர்வு பயிற்சி திட்டமானது நிர்வாக காரணங்களுக்காக கைவிடப்பட்டதாகவும், இத்திட்டத்தில் பயனடைந்த மாணவர்கள் யாரும் இல்லை" என பதில் அளித்துள்ளது.