உச்ச நீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை... அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதிகள் காட்டம்!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பணமோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பாலாஜி சீனிவாசன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி அபய் ஓகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள்,
“செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரும் வழக்கில், கடந்த முறை பதில் சொல்கிறோம் என்று கூறியதால் நோட்டீஸ் அனுப்பவில்லை. ஆனால் தற்போது வரை தமிழ்நாடு அரசிடம் இருந்து பதில் வரவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை. செந்தில் பாலாஜிக்கு நிவாரணம் வழங்குவதா, இல்லையா என்பது தனிப்பட்ட விஷயம். இந்த மோசடியில் எத்தனை சாட்சிகள் உள்ளனர்” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சாட்சியங்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பட்டியலை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கில் உள்துறை செயலாளரை ஒரு எதிர் மனுதாரராக இணைத்து நோட்டீஸ் பிறப்பித்து, பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, பல முறை ஜாமின் கேட்டு விண்ணப்பித்தும், அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இந்த ஜாமின் கிடைத்த ஓரிரு நாட்களில் அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவர் ஏற்கெனவே வைத்திருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையே அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜாமினில் வெளிவந்த உடனேயே அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக நீதிபதி ஓகாவும், அமைச்சருக்கு எதிராக சாட்சியம் சொல்ல சாட்சியாளர்கள் பயப்படுவார்கள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Edited By: போமிதா.செ