வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் இன்றுடன் நிறைவு!
தலைமை தேர்தல் ஆணை யத்தின் வழிகாட்டுதல்படி, தமிர்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்) கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் டிச.4-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், டிச.11ம் தேதி வரை (இன்று) காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர்கள் ஆகியவற்றை நீக்கி, தகுதியுள்ள பட்டியலாக மாற்ற, இந்த எஸ்.ஐ.ஆர். மூலம் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது.
தற்போது 6.41 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ள பட்டியலில், இறந்த மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் 45 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆருக்கான கணக்கீட்டு படிவங்களை வழங்கி, அவற்றை திரும்பப் பெற்று பதிவேற்றம் செய்யும் பணிகள் வரும் இன்றுடன் முடிகிறது.
தொடர்ந்து, வருகிற 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால் 16ஆம் தேதியில் இருந்து ஜனவரி 15ஆம் தேதி வரை பெயர் சேர்க்க மற்றும் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. இதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து வரும் பிப்ரவரி 14ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் வரை 6 கோடியே 40 லட்சத்து 84 ஆயிரத்து 624 படிவங்கள் ( 99.95 சதவீதம்) வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும், அவற்றில் 6 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 877 படிவங்கள் அதாவது 99.55 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.