மாமனார் வீட்டிற்கு எதிரே கைவிலங்குடன் டீக்கடை போட்ட மருமகன்... காரணம் என்ன?
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ண குமார் தக்காட். இவர் கடந்த 2018 இல் மீனாட்சி மாலவ் என்பவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவரும் இணைந்து தேனீ வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2022-ல் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் மீனாட்சி, கிருஷ்ண குமாரிடம் சண்டை போட்டுக் கொண்டு தனது அப்பா வீட்டிற்கு சென்றுள்ளார்.
தனது தந்தை வீட்டிற்கு சென்ற சில மாதங்களுக்கு பிறகு, கிருஷ்ணா மீது ஐபிசி பிரிவு 498Aவின் கீழ் வரதட்சணை புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கிருஷ்ணகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தேனீ வளர்ப்புத் தொழிலை கூட மேற்கொள்ள முடியாமல் காவல் நிலையம், நீதிமன்றம் என அலைந்துள்ளார்.
நீதிமன்ற விசாரணைகளுக்காக கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் 200 கி.மீ வரை பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும் வழக்கு ஒத்திவைக்கப்படுவது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர், அவரது மாமனார் வீட்டிற்கு எதிரே, டீக்கடை ஒன்றை போட்டுள்ளார். அந்த டீக்கடைக்கு “498A T Caf” என வரதட்சணை கொடுமை குற்றப்பிரிவு எண்ணையே பெயராகவும் வைத்துள்ளார்.
மேலும் அந்த கடையில் “எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்” என்ற வாசகங்களையும் வைத்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்,
“ஒரு பொய் வழக்கால் என் வாழ்க்கையே அழிந்துவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக, நீதிக்காக நீதிமன்றம் - வீடு, வீடு - நீதிமன்றம் என அலைந்து கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு வயதான தாய் இருக்கிறார்; அவர் என்னைச் சார்ந்து இருக்கிறார். நான் ஒரு தகரக் கொட்டகையின் கீழ் வசிக்கிறேன், எனக்கு எதுவும் மிச்சமில்லை. பல முறை என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்தேன், ஆனால் என் அம்மாவிற்கு இருக்கும் ஒரே ஆதரவு நான் மட்டும்தான் என்பதால் அந்த முடிவை உதறி தள்ளிவிட்டேன்.
நான் ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்குச் செல்லும்போதும், எனக்கு கிடைப்பது வழக்கு ஒத்திவைப்பு. நீதி கிடைப்பதாக தெரியவில்லை. என்னால் இதற்கு மேல் முடியவில்லை. அன்டாவில் ஒரு தேநீர் கடை நடத்தி இந்த சட்ட சிக்கலை எதிர்த்துப் போராட முடிவு செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவரது மனைவி,
“நிலம் வாங்க என் தந்தையிடம் பணம் கேட்டார். என் அப்பா தர மறுத்தபோது, அவர் என்னை அடித்தார். அதன்பின்னரே நான் எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டேன். நான் விவாகரத்துக்கு தர தயாராக இருக்கிறேன்” என தெரிவித்தார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், கிருஷ்ணகுமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்த கடைக்கு கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாம்.