பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய செஞ்சி ஆட்டுச்சந்தை!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளர்க்கப்படுவதால் இந்த வெள்ளாடுகளை வாங்குவதற்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களிலிருந்தும் மற்றும் தேனி, கம்பம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள். இதனால் செஞ்சி வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாக உள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தையான இன்று அதிகாலை 2 மணி முதலே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் செஞ்சி வார சந்தைக்கு வந்து குவிந்தனர். மேலும் விற்பனைக்காக சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை கொண்டு வந்திருந்தனர். பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வார ஆட்டுச் சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதனால் அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை சுமார் 5 கோடிகளுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.