"ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும்" - சு.வெங்கடேசன் எம்.பி. பேட்டி!
மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர்,
"ரிசர்வ் வங்கி வெளியிட்ட நகைக்கடன் வரைவு அறிக்கை உடனடியாக அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மிக எளிய மக்கள் மீது மோசமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. நகைக் கடன்களுக்காக விதிக்கப்பட்ட பல்வேறு விதிமுறைகள் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு உள்ளது. வங்கிகளில் ஒட்டுமொத்த கடன்களில் 65 சதவீதம் நகைக்கடன் வழங்கப்படுகின்றது. நகைக் கடன்களுக்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டதால் மக்கள் கந்து வட்டிக்காரர்களை நோக்கி செல்வார்கள்.
நகைக் கடன்கள் பெற பல்வேறு ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளது. மக்கள் நகைக் கடன்கள் வாங்க செல்வாரா? ஆவணங்கள் பெற செல்வாரா? புதிய நகைக்கடன் விதிமுறைகள் வாயிலாக மூலம் நிதி சுரண்டல் ஏற்பட்டுள்ளது. விதிமுறைகளை தளர்த்த நிதியமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். அதன் காரணமாக நிதியமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும்.
கீழடி ஆய்வறிக்கையில் ஒன்றிய அரசு எதை மாற்ற முயல்கிறது. தமிழகத்தின் வரலாற்றை பின்னோக்கி இழுத்து செல்ல மத்திய அரசு துடிக்கிறது. ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 2 முறை தனது ஆய்வறிக்கைக்கையை திருத்தி கொடுத்துள்ளார்.
யாருக்காக எதற்காக மீண்டும் திருத்த கேட்கிறார்கள் ஜூன் 11ம் தேதி 21 ஆம் தேதி இந்தியா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம் நடைபெறுகிறது. மாவட்டம் தோறும் இந்த நடைபயணம் நடைபெறுகிறது. மத்திய அரசின் தமிழக அரசுக்கு தரவேண்டிய நிதி குறித்தும், மக்கள் பிரச்சனைகள் குறித்தும் இந்த நடை பயணம் நடைபெறுகிறது" என்று தெரிவித்துள்ளார்.