"காவல்துறை விசாரணை சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் உள்ளது" - இபிஎஸ் குற்றச்சாட்டு!
நெல்லை மாவட்டம் பர்கிட் மாநகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் விக்னேஷ் (21). இவர் தேனி மாவட்டம், போடி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி இ.சி.இ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் உள்ள சுகாதார வளாகத்திற்கு சென்ற விக்னேஷ் நெடுநேரம் கடந்தும் அறைக்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த மற்ற மாணவர்கள், விடுதி காவலருடன் கழிவறைக்கு சென்ற பார்த்தனர். அப்போது கழிவறை உள்பக்கமாக பூட்டி இருந்தது.
நெடுநேரமாக கதவை தட்டியும் திறக்காததால் அங்கிருந்தவர்கள் கதவை உடைத்து பார்த்த போது விக்னேஷ் காயத்துடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இச்சம்பம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவறையில் அதிகளவு ரத்தம் கிடந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில் அவை எறும்பு கடித்ததால் வந்திருக்கலாம் என போலீசார் தெரித்தாக கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"திருநெல்வேலியில் கல்லூரி பயின்று வந்த விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து அவரது தாயார் காவல்துறையில் முறையிட்டு கழிவறையில் இருந்த அதிக அளவு ரத்தம் குறித்து கேட்க, "எறும்பு கடித்ததால் வந்திருக்கலாம்" என்று பொறுப்பற்ற முறையில் காவல்துறை தெரிவித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணை என்பதே விந்தையானதாக மாறிவிட்டது. இசிஆர் வழக்கில் டோல் கேட்டில் விலக்கு பெற திமுக கொடி கட்டிய குற்றவாளி; இப்போது, எறும்பு கடித்து இவ்வளவு இரத்தம் சிந்தி, மர்மமாக உயிரிழந்த மாணவன் என இவர்கள் விசாரணை எல்லாம் சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் தான் இருக்கிறது.
பட்டியலினத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியான மாணவன் விக்னேஷின் மரணத்தின் உண்மையான காரணத்தை மறைத்து திசைதிருப்ப அரசு முயற்சிக்குமாயின், அது கடும் கண்டனத்திற்குரியது. மாணவன் விக்னேஷின் மரணத்திற்கான காரணத்தை முறையாக விசாரணை செய்து கண்டறிந்து, அதில் யாருக்கேனும் தொடர்பிருப்பின், கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.