For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” - இபிஎஸ்-ஐ விமர்சித்த செந்தில் பாலாஜி!

11:59 AM Feb 16, 2025 IST | Web Editor
“எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”   இபிஎஸ் ஐ விமர்சித்த செந்தில் பாலாஜி
Advertisement

மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் நேற்று (பிப்ரவரி 16) தெரிவித்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

ஆனால் மத்திய அரசின் இந்த மிரட்டலுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தற்போது வரை எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூட, மாநில சட்டம், ஒழுங்கு பிரச்சனையாக திரித்து திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி, தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார்? என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

“மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என பகிரங்கமாக மத்திய கல்வி அமைச்சர் மிரட்டி இருக்கிறார். “தமிழ்நாட்டு மக்களை Blackmail செய்யும் நோக்கோடு திமிராக நடந்தால் தமிழ்நாட்டு மக்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் தமிழ்நாட்டு உரிமைகளில் அக்கறையும் கொண்ட அனைவரும் மத்திய பாஜக அரசின் தடித்தனத்தை எதிர்த்து வருகிறார்கள். வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டு, தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூட மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக திரித்து திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார்?

சிறு சிறு விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மாநில பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டாமா? இந்த விவகாரத்திலாவது டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் நேரடியாய் பதில் சொல்லும் துணிவுள்ளதா பழனிசாமிக்கு?

இரு மொழிக் கொள்கையே தாரக மந்திரம் என்பதை கொள்கை முழக்கமாக முழங்கிய பேரறிஞர் பெயரை வைத்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் என கூறிக்கொண்டு, மத்திய பாஜக அரசை கண்டிக்காமல் ஒளிந்திருக்கும் பழனிசாமி அவர்கள் தயவு செய்து அண்ணாவின் பெயரை விட்டுவிட வேண்டும். எதிரிகள் மட்டுமல்லாது துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement