காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கலந்தாய்விற்கு முன் அதிகரிக்கப்படும் - அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
"ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) - 2025.
உதவிப் பொறியாளர் (அமைப்பியல் / மின்னியல் / வேளாண் பொறியியல்) உள்ளிட்ட 47 பதவிகளுக்கான 615 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (21.05.2025) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் 27.05.2025 முதல் 25.06.2025 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். கணினி வழித் தேர்வு 04.08.2025 முதல் 10.08.2025 வரை நடைபெறும்.
தொடர்ச்சியாக 11-வது முறையாக தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர்விற்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 2024-ம் ஆண்டு அறிவிக்கையில், இரண்டு நிதியாண்டுகளுக்கான 1,236 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 618 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) மூலம், ஒரு நிதியாண்டிற்கு (2025-2026) 615 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 2025-ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத் துறை மற்றும் நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும்" என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.