"பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி உண்மை இல்லை" - தாலிபான் செய்தித்தொடர்பாளர் விளக்கம்!
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தாகி ஒரு வார கால பயணமாக இந்தியா வந்துள்ளார். இதனிடையே டெல்லியில் நேற்று முன்தினம் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் முத்தாகி கலந்துகொண்டார்.
இதனை தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் வைத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தாலிபான் செய்தித்தொடர்பாளர் சுஹைல் சாஹின் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "டெல்லி ஆப்கான் தூதரகத்தில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி உண்மை இல்லை. அனுமதி பாஸ்கள் குறைவாகவே இருந்ததால், சிலரால் அதைப் பெற முடியவில்லை. வெளியுறவு அமைச்சர் முத்தாகி பல பெண் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். எதிர்கால இந்திய வருகைகளின் போது பெண் நிருபர்கள் இருப்பதை நிச்சயம் உறுதி செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.