“புதிய எம்.ஜி.ஆராக...” - பவன் கல்யானுக்கு புகழாரம் சூட்டிய நயினார் நாகேந்திரன்!
சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பாஜக நிர்வாகிகளுடன் சேர்ந்து சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணும் கலந்து கொண்டுள்ளார்.
கருத்தரங்கில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, “தமிழுக்கும் தெலுங்குக்கும் நிறைய தொடர்பு உண்டு. பாரதியார் தமிழை புகழ்ந்து பேசியதைப்போல் "சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து" என்று சொல்லி இருக்கின்றார். ஆந்திராவும் தமிழ்நாடும் ஒரே கலாச்சாரத்தையும் பண்பாடையும் கொண்டது. அந்நியர்களை எதிர்த்து போராடுவதில் இரு மாநிலங்களும் சேர்ந்தே போராடி இருப்பது ஒற்றுமையானது.
ஆந்திராவில் என்.டி.ஆர் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். அவர்கள் இருவருக்கும் நிறைய தொடர்பு உண்டு. அதே போல் புதிய எம்.ஜி.ஆராக இருக்கும் பவன் கல்யாண் இன்றைக்கு நம்முடன் பவனி வந்திருக்கிறார். அவருடைய வரவு நல்வரவாக வேண்டும். அவர் வந்திருப்பதை தேச ஒற்றுமை நாளாக நினைக்கிறேன். ஒரே நாடு ஒரே தேசம் 1960 வரையில் ஒரே தேர்தலாக இருந்தது. கடந்த 2024 மக்களவை தேர்தலில் 1 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறோம். ஒரே தேர்தலாக இருந்தால் நிச்சயம் அதில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மிஞ்சும். அதுமட்டுமில்லாது 1.5 லட்சம் ஜிடிபி உயர்கிறது.
எனவே ஒரே நாடு ஒரே தேர்தலால் நமக்கு இவ்வளவு நன்மை கிடைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நேரம் மிச்சமாகிறது. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒற்றை கட்சியின் ஆட்சிக்கு வழிவகுக்கும் என்கிறார். ஆனால் அவரது தந்தை ஆதரித்திருக்கிறார்”
இவ்வாறு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.