"மோடி ஆட்சி தமிழகத்தை வஞ்சிக்கிறது" - உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்!
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் பொன்னேரி பழவேற்காடு சாலையில் பஜார் வீதியில் மாவட்ட கழக பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சாமு நாசர் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேசுகையில்,
பச்சைத்தமிழர் காமராஜர் அறிஞர் அண்ணா பேராசிரியர் அன்பழகன் தேர்தலில் நின்று தோற்றவர்கள், ஆனால் கலைஞர் ஒருவர் மட்டுமே போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் நின்று வெற்றி பெற்றவர். வால்பாறை சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிரிகள் கணக்கு போட்டுக் கொண்டிருப்பார்கள். தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெல்லும். மத்தியில் ஆளுகின்ற மோடி ஆட்சி தமிழகத்தை வஞ்சிக்கிறது.
எடப்பாடி, அண்ணாமலை, நைனார் நாகேந்திரன் உள்ளிட்ட நாடக கம்பெனிகள் எத்தனை பேர் களத்தில் நின்றாலும் அரசியல் களத்தில் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான்" என்று தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், பொன்னேரி நகர இளைஞர் அணி பொறுப்பாளர் தீபன், மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.