“மாணவர்கள் இட ஒதுக்கீடு விவரத்தை கேட்க சிறுபான்மை ஆணையத்திற்கு உரிமை கிடையாது” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!
தேனி மாவட்டம் பெரியகுளம் ஜேயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரி செயலர், மதுரை சத்திரப்பட்டி கிரசண்ட் பெண்கள் கல்வியியல் கல்லூரி முதல்வர், திருநெல்வேலி பாளையங்கோட்டை புனித சேவியர் கல்வியியல் கல்லூரி செயலர் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில்,
கடந்த 2016, 2017, 2018, 2019ஆம் ஆண்டுகளில் எங்களது கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டு அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை குறித்த விவரங்களை அனுப்புமாறு மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த ஆணையம் சார்பில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து விபரங்களைக் கேட்பதற்கு அதிகாரம் இல்லை. எனவே சிறுபான்மை உறுப்பினர் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எல். விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய சட்டம் பிரிவு 8 (1) இல், சாதி நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது, அரசியலமைப்பு சட்டப்படி சிறுபான்மையினருக்கு எதிராக எந்த செயலும் நடைபெறாமல் கண்காணிப்பது மட்டுமே அந்த ஆணையத்தின் பணியாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் தவிர்த்து, மூன்றாவதாக கல்லூரி மாணவர்கள் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சேர்க்கப்பட்ட விபரத்தை அந்த ஆணையம் கேட்டுள்ளது.
மாணவர்கள் இட ஒதுக்கீடு விவரத்தை கேட்பதற்கு மாநில சிறுபான்மை ஆணையத்திற்கு உரிமை கிடையாது. எனவே மனுதாரர்களுக்கு, சிறுபான்மை ஆணையம் அனுப்பிய கடிதம் ரத்து செய்யப்படுகிறது” என தீர்ப்பளித்தார்.