இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை! தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்து முக்கிய முடிவு...!
இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன.
இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக தொடர்ந்து ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. அந்தவகையில், கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் நான்காவது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது, நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை தொடங்குவது, தேர்தல் வியூகம், உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.