முன்னாள் காதலியின் வீட்டின் மீது கையெறி குண்டு வீசிய நபர்... இறுதியில் நடந்த விபரீதம்!
தாய்லாந்தைச் சேர்ந்தவர் சுரபோங் தோங்னக் (35). இவர் தா சனா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் அவரை விட்டு விலகுவதாக கூறிவிட்டார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சுரபோங் தோங்னக், தனது முன்னாள் காதலியின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் முன்னாள் காதலியை சமாதானம் செய்ய முயற்சித்தார். இருப்பினும் அந்த பெண் அவருடன் மீண்டும் சேர மறுத்துவிட்டார்.
இதனால் கோபமடைந்த சூரபோங் தனது முன்னாள் காதலியை கத்தரிக்கோலால் குத்த முயன்றார். வழியில் சென்றவர்கள் தலையிட்டு அவரைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் சூரபோங் தனது காருக்குத் திரும்பிச் சென்று, ஒரு கெயெறி குண்டை எடுத்து முன்னாள் காதலியின் வீட்டின் முன்பு தன்னைத் தடுக்க கூடியிருந்த மக்களை நோக்கி வீசினார். அந்த கெயெறி குண்டை வெடிக்கவில்லை. பின்னர் சூரபோங் அதை மீண்டும் வீசி எறியும் நோக்கத்தில் கெயெறி குண்டை எடுத்தார். அவரது கையில் இருந்தபோது கையெறி குண்டு திடீரென வெடித்தது.
இதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்தன. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சோதனை செய்தபோது, சுரபோங் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், இதில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவரது முன்னாள் காதலி, காயமின்றி உயிர் தப்பினார். கையெறி குண்டு வெடிப்பதற்கு முன்பு அவர் வீட்டிற்கு ஓடிவிட்டார்.
குண்டுவெடிப்பில் சேதமடைந்த சுரபோங்கின் காருக்குள் 500 கிராம் மெத்தம்பேட்டமைன் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு, போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.