ஒற்றை வார்த்தையால் பறிபோன மூதாட்டியின் உயிர்... உறவினர் கைது!
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலம் கருக்குப்பட்டியை சேர்ந்தவர் மூதாட்டி ராஜம்மாள் (94). இவர் கடந்த 3ம் தேதி திடீரென உயிரிழந்தார். இதனையடுத்து, மூதாட்டியின் உறவினர்கள் மூதாட்டியின் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்துக்கொண்டிருந்தனர். அப்போது, மூதாட்டி ராஜம்மாளின் தலையில் வெட்டுக்காயம் இருப்பதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாரமங்கலம் போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
இதையும் படியுங்கள் : நிழலுக்காக ரோடு ரோலர் அருகே அமர்ந்த இன்ஜினியர்… நொடிப்பொழுதில் நடந்த விபத்து – மதுரையில் அதிர்ச்சி!
தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மூதாட்டியின் உறவினரான செல்வராஜ் என்பவர் கொலை செய்தது கண்டறியப்பட்டது. கொலையாளி செல்வராஜுக்கு உயிரிழந்த மூதாட்டி ராஜம்மாள் பெரியம்மா உறவுமுறையாகும். கடந்த 3-ம் தேதி ராஜம்மாள் படுத்திருந்த போது, அந்த வழியாக செல்வராஜ் சென்றார்.
அப்போது, "கொலைகாரனான நீ இங்கு வரக்கூடாது" என செல்வராஜை நோக்கி ராஜம்மாள் கூறியதாக தெரிகிறது. அப்போது போதையில் இருந்த செல்வராஜ் கொலைகாரன் என சொன்னதை கேட்டு ஆத்திரமடைந்து, இரும்பு கரண்டியால், ராஜம்மாள் தலையில் வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து போலீசார் செல்வராஜை கைது செய்தனர். இவர் கடந்த 2022-ல், மது குடித்த தகராறில், நண்பரை வெட்டி கொலை செய்து கைது செய்யப்பட்டவர். இதன் காரணமாக மூதாட்டி அவரை கொலைக்காரன் என கூறியிருக்கலாம் என்று அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.