மாணவரை திட்டி டிசியை கொடுத்த தலைமை ஆசிரியர்... 10ம் வகுப்பு மாணவர் மாயம் - சென்னையில் அதிர்ச்சி!
சென்னை அடுத்த அனகாபுத்தூரில் வேல்ஸ் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஹரிவராசன் என்ற மாணவர் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில், மாணவர் ஹரிவராசன் பள்ளியில் ஒலுங்கினமாக நடந்து கொண்டதாக கூறி பள்ளியின் தலைமை ஆசிரியர் நேற்று மாலை 5 மணியளவில் (ஜுன் 11) மாணவனை கண்டித்தார். மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து நடந்ததை கூறாமல் மாணவனிடமே டிசியை கொடுத்து அனுப்பினார். இதனால் மாணவர் மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : தவெக-வின் 3ம் கட்ட கல்வி விருது விழா எப்போது? – வெளியான முக்கிய அறிவிப்பு!
உடனடியாக மாணவர் பள்ளியில் இருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மாணவர் நேற்று மாலை வீடு திரும்பவில்லை. வழக்கமாக பள்ளியில் இருந்து வீடு திரும்பும் நேரம் கடந்தும் மாணவர் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து பள்ளியில் விசாரித்தபோது அவர்கள் தரப்பில் முறையான பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. உடனடியாக மாணவரின் பொற்றோர்கள் இச்சம்பவம் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மாணவரை தேடி வருகின்றனர். பள்ளி தரப்பில் உரிய பதிலளிக்காத காரணத்தினார் பள்ளியின் நுழைவாயிலில் முன்பு மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டுள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர் நேற்று மாலையில் இருந்து மாயமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.