For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிகரித்து வரும் BTS மோகம் - இசைக்குழுவை காண கரூர் மாணவிகள் சென்றது உண்மைதானா..?

10:59 AM Jan 08, 2024 IST | Web Editor
அதிகரித்து வரும் bts மோகம்   இசைக்குழுவை காண கரூர் மாணவிகள் சென்றது உண்மைதானா
Advertisement

பள்ளிக்கூடம் சென்ற கரூர் மாணவிகள் மாயமானதும் அதனைத் தொடர்ந்து அவர்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

உலகம் முழுக்க BTS ஜுரம் தொற்றிக் கொள்ள அதன் தாக்கம் தமிழ்நாட்டின் கடைகோடி கிராமத்தையும் வந்தடைந்துள்ளது. பள்ளிக்கூடம் செல்வதாக கூறி மாயமான மாணவிகள் காட்பாடி ரயில் நிலையத்தில் வைத்து காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டனர். மாணவிகளிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

தென் கொரியாவைச் சேர்ந்த பாப் இசைக்குழு  பிடிஎஸ். இது  உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட ஒரு சுதந்திரமான மியூசிக் பேண்ட் குழுவாகும்.
பி.டி.எஸ்., குழுவில்  இடம்பெற்றுள்ள ஆர்.எம்., ஜின், சுகா, ஜெ-ஹோப், ஜிமின், வி மற்றும் ஜங்கூக் ஆகியோர் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர். இவர்களால் தென் கொரிய பொருளாதாரத்திற்கு பில்லியன் டாலர் கணக்கில் வருவாய் கிடைத்துக் கொண்டிருந்தது

பிடிஎஸ் குழுவில் உள்ள அனைவருமே 20 வயதுகளில் உள்ளவர்களே. லிப்ஸ்டிக்கும், விதவிதமான காதணிகளும், உள்ளம் கவர் குரலும், இசையுமே இவர்களின் அடையாளம். கடந்த 9 ஆண்டுகளாக இந்த இசைக்குழு ஏராளமான பாப் இசைப் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்துவந்தது.

பி.டி.எஸ்., தென் கொரிய இசைக் குழுவுக்கு அந்த நாட்டைத் தாண்டி உலகம் முழுக்க ரசிகர்கள் உண்டு.  தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கல்ல.  பி.டி.எஸ் ரசிகர்கள் தங்களது சமூக வலைதள கணக்கான இன்ஸ்டா, பேஸ்புக் பையோவில் பி.டி.எஸ்., ஆர்மி என போட்டுக்கொண்டு வலம் வருகிறார்கள்.

பிடிஎஸ் குழு 2010-இல் உருவாக்கப்பட்டு 2013-இல் பிக் ஹிட் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் கீழ் அறிமுகமானது. இக்குழுவின் பாடல்கள் பெரும்பாலும் சமூக நிகழ்வுகளை மையமாகக் கொண்டவை. இதன் காரணமாக இக்குழுவின் பாடல்கள் இளைய தலைமுறையிடத்தில் மிகவும் பிரபலம். பிடிஎஸ் இசைக் குழு இதுவரை 6 அமெரிக்க இசை விருதுகள், 5 பில்போர்டு மியூசிக் விருதுகளையும் வென்றுள்ளது.

இந்த நிலையில் கரூர் ராயனூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவிகள் 3பேர் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்று வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது மாணவிகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

பதற்றமடைந்த மாணவிகளின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்நிலையில் காணாமல்போன மூன்று மாணவிகளும் நேற்று காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே போலீசாரால் மீட்கப்பட்டனர். மாணவிகள் தனியே வந்ததையடுத்து, சந்தேகத்தின்பேரில்  நடத்திய விசாரணையில் அந்த மாணவிகள் கரூரைச் சேர்ந்தவர்கள் என்பதை காவலர்கள் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து  காட்பாடி போலீசார் கரூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து அந்த மாணவிகளை கரூர் அழைத்து வர மாவட்ட காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.  பள்ளிக்கூடத்தில் இருந்து தப்பிய மூன்று பள்ளி மாணவிகள் தென்கொரிய இசைக்குழுவான BTS-ஐ காண வேண்டும் என்ற ஆசையில் வீட்டைவிட்டு வெளியேறி கொரியா செல்ல முயன்றதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியுள்ளது.

8ஆம் வகுப்பு மாணவிகள் பிடிஎஸ் இசைக்குழுவை காண தப்பியோடியதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாணவிகள் குறித்து யாரும் தவறான தகவல்கள் பரப்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement