For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழக அரசே! உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!” - இயக்குநர் #PaRanjith கண்டனம்!

06:46 PM Oct 09, 2024 IST | Web Editor
“தமிழக அரசே  உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு ”   இயக்குநர்  paranjith கண்டனம்
Advertisement

சாம்சங் தொழிலாளா்கள் போராட்டத்திற்கு இயக்குநர் பா. இரஞ்சித் ஆதரவு அளித்துள்ளார்.

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த நான்கு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் அடங்கிய குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். இந்தக் குழுவினர் சாம்சங் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கம் அமைப்பதைத் தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சாம்சங் இந்தியா சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜனும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் பா.இரஞ்சித் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை.

https://twitter.com/beemji/status/1843970014770041153

தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை. தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது. மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!” எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement