திமுக ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது!
வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். கட்சியில் நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, புதிய மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. திமுகவில் 72 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்.
அமைப்பு ரீதியாக புதிய மாவட்ட செயலாளர்களை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. தற்போது 4 சட்டப்பேரவை தொகுதியை ஒருங்கிணைத்து ஒரு மாவட்ட செயலாளர் உள்ள நிலையில், 2 சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என நியமிக்கும் வகையில் ஆலோசிக்கப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் 5 பேர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தலைமையிலான குழு ஆலோசனை செய்து கட்சியில் நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் போன்றவை குறித்து மு.க. ஸ்டாலினிடம் அறிக்கை வழங்க உள்ளது.