For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான பொருட்களை ஜூனிலும் பெறலாம்!

01:17 PM May 28, 2024 IST | Web Editor
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி  ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான பொருட்களை ஜூனிலும் பெறலாம்
Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை வாங்காதவர்கள் ஜூன் மாதம் முதல் வாரம் வரை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

Advertisement

மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக,  ஒப்பந்த புள்ளிகளை இறுதிசெய்து பாமாயில்,  துவரம்பருப்புகளை கொள்முதல் செய்வதில் தாமதமானது. இதனால் மே மாதத்தில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டது.  இது தொடர்பாக நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியானது.

இந்நிலையில் இம்மாதத்திற்கான எண்ணெய்,  பருப்பு வாங்காதவர்கள் அதனை ஜூன் மாதம் முதல் வாரம் வரை வாங்கிக் கொள்ளலாம் என உணவுப்பொருள்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“தமிழ்நாடு அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது. இருப்பினும் அரசின் தொடர்ந்த சீரிய முயற்சிகள் காரணமாக நகர்வுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு மே 27ஆம் தேதி வரை 82,82,702 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு கிலோ துவரம் பருப்பினையும் 75,87,865 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்டினையும் நியாயவிலைக் கடைகளிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

24,96,510 கிலோ துவரம் பருப்பு மற்றும் 33,57,352 பாமாயில் பாக்கெட்டுகள் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல தயார் நிலையிலும் 8, 11,000 கிலோ துவரம் பருப்பு மற்றும் 7,15,395 பாமாயில் பாக்கெட்டுகள் கிடங்குகளில் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும் பொருட்டு நாளது தேதியில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மீதம் பெற வேண்டிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெற்று விரைவாக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

குடும்ப அட்டை தாரர்களுக்கு மே 2024 மாத ஒதுக்கீட்டினை இம்மாத இறுதிக்குள் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் மே 2024 மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுன் 2024 மாதம் முதல் வாரம் வரை நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு மே 2024 மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான மே 2024 மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜுன் 2024 மாதம் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம்” என குறிப்பிட்டுள்ளது.

Tags :
Advertisement