புரோ கபடி லீக் | தமிழ் தலைவாஸை வீழ்த்தியது தபாங் டெல்லி!
புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் பரபரப்பாக புள்ளிகளை சேகரிக்க தொடங்கின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 51-49 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்ஸ் அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி தமிழ் தலைவாஸை எதிர்கொண்டது. அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை அள்ளினர். ஆட்டம் பரபரப்பாக நடந்த நிலையில் எந்த அணி வெற்றி பெற போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.
முடிவில் அதிரடியாக ஆடிய தபாங் டெல்லி அணி 37-31 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸை வீழ்த்தியது. ஒருசில புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், வருத்ததையும் அளித்தது. தொடர்ந்து நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பேர்ந்தர்ஸ் - யுபி யோத்தாஸ் அணிகள் மோதுகின்றன.