“ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை வைக்க சூழல் கனியவில்லை” - திருமாவளவன் எம்.பி பேட்டி!
மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
திருப்பரங்குன்றம் பிரச்னை தொடர்பான கேள்வி:
“தமிழ்நாட்டில் மதவாத அரசியலுக்கு இடம் இல்லை என்பதுதான் நம்முடைய வரலாறு. அதற்கு நேர் மாறாக ஆர்எஸ்எஸ் சங்க பரிவார் அமைப்புகள் மக்களை மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாட்டில் எந்த மதத்திலும் முரண்பாடுகள் இல்லை. சகோதர வாஞ்சையோடு அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் வாழ்ந்த நிலையில் இங்கே மதத்தின் பெயரால் அரசியல் ஆதாயம் தேட சங் பரிவார் அமைப்புகள் முயற்சிக்கின்றன. அதில் ஒன்றுதான் திருப்பரங்குன்றம் பிரச்னை. அந்தப் பகுதியை சார்ந்தவர்களோ, அந்த வழிபாட்டுக்கு வருகிற பக்தர்களும் யாரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை சொல்லவில்லை. அப்படி ஒரு முரண்பாடு இல்லாத போது சங் பரிவார் அமைப்பை சார்ந்தவர்கள் குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கே முரண்பாடுகளை உருவாக்கும் முயற்சிக்கிறார். இதனை மதுரை பகுதியை சேர்ந்த மக்கள் செய்யும் சூது சூழ்ச்சிக்கும் பழியாக மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என வைகை செல்வன் கூறியது குறித்த கேள்விக்கு:
நட்பின் அடிப்படையில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது அவ்வளவுதான். அண்மையில் ஒரு நிகழ்வில் நாங்கள் பங்கேற்க கூடிய வாய்ப்பு அமைந்தது. விஐடி உரிமையாளர் வேந்தர் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம். அப்போதுதான் அவருடன் அறிமுகம் கிடைத்தது. அதன் பின்னர் திருச்சியில் நாங்கள் மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடத்திய சூழலில் நாங்கள் தங்கியிருந்த அறையில் எனக்கு புத்தகத்தை பரிசளித்தார் அவ்வளவுதான். விடுதலைப் போரில் சீர்காழி என்கிற புத்தகம் அவர் வழங்கினார் அரசியல் எதுவும் பேசாமல் பலர் முன்னிலையில் நடைபெற்ற சந்திப்பு அவர் இலக்கிய தரத்தில் என்ன செய்து வருகிறார் என்பதை என்னிடத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். நானும் அரசியல் பேசவில்லை, அவரும் அரசியல் பேசவில்லை. அவர் ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை.
விசிக ஆட்சியில் பங்கு என்பதை முன்னெடுக்குமா என்ற கேள்விக்கு:
அது அதற்கு ஆதரவான சூழல் இல்லை. சங் பரிவார் அமைப்புகள் அதிமுகவுடன் சேர்ந்து வலிமை பெற முயற்சிக்கிற சூழலில் அதனை முறியடிக்க வேண்டும் என்பதில்தான் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 2015-16 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்கிற பெயரில் கருத்தரங்கத்தில் நாங்கள் ஒருங்கிணைத்தோம். அப்போது நான் இந்த கருத்தை பேசிய போது பலரும் அதை நகைப்புக்குரியதாக பார்த்தார்கள் இன்றைக்கு அதை எல்லோரும் பேசுகிறார்கள். அன்றே அனைவரும் கை கொடுத்திருந்தால் வலு கூடி இருக்கும். இப்போது அவர்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள் அந்த கருத்தில் நாங்கள் மாறுபடவில்லை உடன்படுகிறோம். கூட்டணி ஆட்சி என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. வேண்டாம் என்கிற நிலைப்பாடு கிடையாது. ஆனால் அந்த கோரிக்கை வைக்கின்ற சூழல் கனியவில்லை.
முருகர் மாநாட்டிற்கு அழைப்பு வந்தது குறித்த கேள்விக்கு:
வந்தவர்களை மரியாதை நிமித்தமாக வரவேற்று சந்தித்தோம் முருக பக்தர் மாநாட்டை நடத்தக்கூடாது என நான் சொல்ல முடியாது. ஆனால் நானும் பள்ளிக்காலத்தில் முருகனை வழிபட்டு பக்தனாக இருந்திருக்கிறேன். நட்பு அடிப்படையில், மரியாதை நிமித்தம் அடிப்படையில் அந்த சந்திப்பு நடைபெற்றது.
அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிடமாற்றம் குறித்த கேள்விக்கு:
தொல்லியல் துறை அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிடமற்றம் விசிக வன்மையாக கண்டிக்கிறது. கீழடி ஆய்வறிக்கையை அவர்கள் ஏற்கவில்லை. இன்னும் ஆதாரம் தேவை என சொல்கிறார்கள். ஆனால், என்ன வேண்டும் என வரிசைப்படுத்தவில்லை. உலகளாவிய அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்ட அடிப்படையில் கீழடி நாகரீகம் 2600 ஆண்டுகள் பழையது என உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பாஜக ஆட்சியாளர்களால் ஏற்க முடியவில்லை என்பது தமிழர்களை அவர்கள் எவ்வளவு அந்நியமாக, எதிராக, பொறாமையாக பார்க்கிறார்கள் என்பது தெரிகிறது. தமிழ்நாடு மக்கள், பாஜக இத்தகைய மனநிலை கொண்ட கட்சி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்கள் எப்படி முருகன் மாநாட்டை நடத்துகிறார்கள். ஒரிசாவில் தமிழர் முதல்வராக அதை குறித்து பேசுபவர்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுவேடம் போடுகிறார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தவறு என்கிற அடிப்படையில் சொல்லவில்லை. ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் கிராஸ் ரூட் அளவில் அதை எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்கிற தேவைக்காக அப்படி சொன்னேன். திமுக, அதிமுக என இரண்டு கட்சிகள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்களை போடக்கூடிய கட்டமைப்பை கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு ஆட்சிக்கு வருவதான வாய்ப்பு பெற்று இருக்கிறது என்பதை சொல்லும் போது இதை சொன்னேன்” எனக் கூறினார்.