சென்னையில் நடைபெறவிருந்த தேர்தல் ஆணையர் கூட்டம் ஒத்திவைப்பு…!
மக்களவைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் நடைபெறவிருந்த தேர்தல் ஆணையர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சி வருகிற மே மாதத்தோடு முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் 2024ம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் மே மாத தொடக்கத்திலோ, இறுதியிலோ நடைபெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
2024-ம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் மக்களவைக்கான 17வது தேர்தலாகும். இந்தியா முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. தற்போது உள்ள சூழலில் இரண்டு பிரதான கூட்டணி வருகிற தேர்தலில் முக்கியத்துவம் பெறுகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்கட்சிகள் முன்னெடுத்துள்ள இந்தியா கூட்டணிக்கு இடையேதான பலமான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையும் படியுங்கள் : இந்தியாவில் அரசியல் கூட்டணிகளின் வரலாறு..!!
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் வரும் 8-ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும், இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி மையங்கள், தேர்தல் பணியாளர்கள், தேர்தல் பாதுகாப்புகள் தொடர்பாக இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தும் மாதம் மற்றும் தேதிகள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் சென்னையில் நாளை நடைபெற விருந்த இந்திய தேர்தல் ஆணையர் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கான தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.