For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"திருச்செந்தூர், ராமேஸ்வரம் கோயில்களில் பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல" - அமைச்சர் சேகர் பாபு அறிக்கை!

திருச்செந்தூர், ராமேஸ்வரம் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 
07:13 PM Mar 18, 2025 IST | Web Editor
 திருச்செந்தூர்  ராமேஸ்வரம் கோயில்களில் பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல    அமைச்சர் சேகர் பாபு அறிக்கை
Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ் தாஸ் என்ற பக்தர் இன்று அதிகாலை ஸ்படி லிங்கம் தரிசனம் செய்வதற்காக இந்த கோயிலுக்கு வருகை தந்தார். அங்கு அவர் வரிசையில் நின்றிருந்தபோது கூட்டு நெரிசலில் சிக்கி திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோயில் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜ் தாஸ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடலை உடற்கூராய்விற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நேற்று முன்தினம் வருகை தந்த காரைக்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவங்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இச்சம்பவங்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அமைச்சர் சேகர் பாபு கூறியிருப்பதாவது,

"திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நேற்று முன்தினம் (16.03.2025) சுவாமி தரிசனம் செய்ய வருகைதந்த காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார், அவரது குடும்பத்தினர் முன்னரே தரிசனம் செய்ய வரிசையில் சென்ற நிலையில் தனியாக சென்ற போது அவருக்கு ஏற்கனவே உள்ள மூச்சுத்திணறல் நோயினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.

அதேபோன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு இன்று (18.03.2025) விடியற்காலை ஸ்படிகலிங்க தரிசனத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மயங்கிய நிலையில் காணப்பட்டதால் அவரை கோயில் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் முதலுதவி மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட இரண்டு கோயில்களிலும் உயிரிழந்த பக்தர்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழக்கவில்லை. பக்தர்களின் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவிக்காக இக்கோயில்கள் உள்ளிட்ட 17 கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், அனைத்து கோயில்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தனி வரிசைமுறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைத்தவர்களுக்கு மக்கள் கொடுத்த அடியால் அண்ணாமலை போன்றோர் இந்து சமய அறநிலையத்துறையின் மீது இதுபோன்ற களங்கம் கற்பிக்க முயல்வதில் வியப்பேதுமில்லை"

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement