கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை கட்டி வைத்து அடித்த கொடூரம்!
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் தொகுதியில் கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிரிஷா (வயது 29) என்பவர் தனது குழந்தைகளின் மாற்று சான்றிதழை பெறுவதற்காக பெங்களூரில் இருந்து குப்பம் பகுதிக்கு திரும்பி வந்துள்ளார்.
அப்போது தனது கணவர் திம்மராயப்பாவின் கடன் தொகையை திருப்பி செலுத்த கோரி உள்ளூர்வாசிகள் புகார் அளித்தனர். தொடர்ந்து அந்த பெண்ணை அவர்கள் அங்குள்ள வேப்ப மரம் ஒன்றில் கட்டி வைத்து, கணவருக்கு அழைப்பு விடுத்து பணத்தை வாங்கி தருமாறு கேட்டுள்ளாதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், திம்மராயப்பா - சிரிஷா தம்பதி, முனிகண்ணப்பா என்பவரிடம் ரூ. 80,000 கடன்பட்டிருந்ததும், மேலும் சில தொகை உள்ளூர் வாசிகளிடம் இருந்து கடன் பெற்றிருந்ததும் தெரிய வந்தது. அத்துடன் இந்த விவாகரம் தொடர்பாக 5 பேரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் சிரிஷா ஆறு மாதங்களுக்கு முன்பு தனது கணவர் பெங்களூருவில் தன்னை கைவிட்டுச் சென்றதாக கூறியுள்ளார்.
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொகுதியில் அரங்கேறிய இச்சம்பவம் பேசும் பொருளாக மாறியுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக அவர், பெண்ணைத் தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.