"ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற தீர்ப்பை பெற்று தந்தவர் முதலமைச்சர்" - அமைச்சர் ரகுபதி பேச்சு!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு அரசின் நான்காம் ஆண்டு சாதனை விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக இயற்கைவளங்கள்துறை அமைச்சரும், திமுக தெற்கு மாவட்டச்செயலருமான எஸ்.ரகுபதி தலைமை வகித்து பேசினார். அப்போது பேசியவர்,
"திமுக அரசின் நான்காண்டு சாதனைகளைப்போல் வேறு யாரும், எந்த கால கட்டத்திலும் செய்தது கிடையாது. செய்ததாக வரலாறும் கிடையாது. அந்த வகையில் அதிகமாக செய்திருக்கிறோம். அடுக்கடுக்காக செய்திருக்கிறோம். மக்கள் மனம் நிறைவடையும் வகையில் மக்களுக்காக பணியாற்றியுள்ளோம். 2021ம் ஆண்டிற்கு முன் பொன்னமராவதி பேரூராட்சி மற்றும் ஒன்றியத்தின் நிலை மற்றும் அதற்குப்பின் திமுக அரசின் காலத்தில் அடைந்துள்ள முன்னேற்றங்களை மனசாட்சி உள்ள அனைவரும் அறிவார்.
பொன்னமராவதி பேருந்துநிலையம் புதுப்பிக்கும் பணி, அமரகண்டான் ஊரணியைச்சுற்றிலும நடைபாதை அமைக்கும் பணி, தினசரி சந்தைக்கு புதிய கூடம் அமைக்கும் பணி, மின் மயானம் அமைக்கும் பணி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைத்தல், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் அமைக்கும் பணி என அடுக்காக பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளது.
அதுபோல ஏராளமான சாலைகள் கிராமப்புறங்களில் புதிய சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து வசதி இல்லாத பல்வேறு பகுதிகளுக்கு புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மானவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டம் அமைத்துத்தரப்பட்டுள்ளது. அதுபோல பேராசிரியர் அன்பழகனார் திட்டத்தின் கீழ் ஒன்றியத்தின் பல்வேறு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் வீட்டு வசதி திட்டம் மூலம் ஏராளமானவர்களுக்கு வீடுகள், கடையக்குடி பகுதியில் சமத்துவபுரம், திருமயத்தில் அரசு மருத்துவமனை என மக்கள் மனம் நிறைவடையும் வகையில் செய்துள்ளோம். ஜல்லிக்கட்டுக்கு எந்த தடையும் இல்லை என தீர்ப்பினை பெற்றுத்தந்தவர் நமது முதல்வர் ஸ்டாலின்.
பொன்னமராவதி பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சனையான குப்பைப் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோல் இந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.