“மூன்று மொழி கொள்கை தோல்வியை மடைமாற்ற, தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசியுள்ளார்” - அண்ணாமலை!
கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“மார்ச் முதல் வாரத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு
அழைப்பு விடுத்துள்ளனர். நாடாளுமன்றம், சட்டப்பேரவை தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.
மறுசீரமைப்பு வரும் போது தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என முதல்வருக்கு
யாரோ கூறியுள்ளனர். அது யார் என்று எனக்கு தெரியாது. மக்களவையில் 543 இடங்கள் உள்ள நிலையில், அது 800-க்கும் மேல் அதிகரிக்கும் என்றும் தமிழகத்திற்கு 22 இடங்கள் கிடைக்க வேண்டும், ஆனால் 10 இடங்கள் தான் கிடைக்கும் என யாரோ கூறியுள்ளார்.
மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு என எங்கும் கூறாத நிலையில் எந்த அடிப்படையில் முதல்வர் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசியுள்ளார் என தெரியவில்லை. மக்களவை தேர்தலின் போது, ஏற்கெனவே இதுதொடர்பாக காங்கிரஸ் புரளி பரப்புகிறது. என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இன்று தமிழக அரசு மூன்று மொழி கொள்கையில் தோற்றுவிட்டனர். அதை மடைமாற்ற வேண்டும். சங்கரன் கோயில் பகுதியில் இந்திக்கு பதில் ஆங்கிலத்தை கருப்பு மை கொண்டு திமுக-வினர் மறைத்துள்ளனர்.
எனவே மடை மாற்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசி வருகிறார். நான் வன்மையாக கண்டிக்கிறேன். முதல்வர் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த கூடாது. 2001-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பை அன்றைய பிரதமர் வாஜ்பாய் 25 ஆண்டுகள் ஒத்திவைத்தார். யாருக்கும் பிரச்சினை ஏற்படக்கூடாது என ஒத்திவைத்தார். மறுசீரமைப்பு தவிர்க்க முடியாது. தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் செயல்படுத்த வேண்டியது எங்கள் பொறுப்பு. முதல்வர் தனக்கு தொகுதி மறுசீரமைப்பு குறித்து யார் தகவல் கூறியது என தெரிவித்தால் மட்டுமே அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்கும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.