‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் இங்கிலாந்து சென்று பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ - மாணவியரின் தனித்திறன்களை கண்டறிந்து, அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, லண்டனின் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஒரு வார திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரிட்டிஷ் கவுன்சிலுடன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய பயிற்சிகளுக்கு, தமிழ்நாட்டில் உள்ள 15 பொறியியல் மற்றும் 10 அறிவியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்காக கல்லூரிகள் மூலம் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை திறன் மேம்பாட்டுக்கழகம் பெற்றது. அப்போது பல்வேறு சிறப்பு பயிற்சிகள் பெற்ற 1,267 மாணவ - மாணவியர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு பல திறனாய்வு தேர்வுகளை நடத்தி, அதில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின்னர், அந்த 100 பேருக்கும் ஆன்லைன் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட 25 மாணவ - மாணவியர் லண்டன் செல்ல தேர்வு செய்யப்பட்டனர்.
இதையும் படியுங்கள் : “வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை நீட்டிக்க வேண்டும்” – ஆம்னி உரிமையாளர்கள் கோரிக்கை!
இதையடுத்து, கடந்த 9-ம் தேதி அதிகாலை அந்த மாணவ - மாணவியர் சென்னையில் இருந்து லண்டன் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் பேராசிரியர்கள் இருவரும் லண்டன் சென்றனர். கடந்த 16-ம் தேதி வரை மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், பயிற்சியை நிறைவு செய்த 25 பேரும் லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் மாணவ - மாணவியரை அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் வரவேற்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்பு எனவும் மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.