வக்ஃப் சட்டம் மூலம் சிறுபான்மையினரை ஒடுக்குவதே மத்திய அரசின் குறிக்கோள் - நவாஸ் கனி எம்பி பேட்டி!
வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் கடத்த ஆண்டு ஆகஸ்டில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். இதையடுத்து வக்ஃப் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கூட்டுக்குழுவில் அந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.
இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
இதற்கிடையே, வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து, 17 மணி நேர விவாதத்துக்கு பின் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து அந்த மசோதா குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை பரிசீலித்த குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் மசோதா அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு அரசிதழில் வெளியானது.
வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அலுவல்கள் இன்று தொடங்கியவுடன் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் , தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு முன்பு வக்பு வாரிய சட்டத்திருத்த்துக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்கக்கோரி முறையிட்டார்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தெரிவித்ததாவது..
“ மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்டத்திருத்தம் அரசியல் சாசன அடிப்படையை மீறுகிறது. இந்த சட்டம் அரசியலமைப்பு பிரிவு 40க்கு எதிராக உள்ளது. எனவே இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் இந்த சட்டத்நை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததிலிருந்தே நாங்கள் கடுமையாக எதிர்த்தோம்
இந்த சட்டம் குறித்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு நாடாளுமன்றத்தில் கூறியதில் எந்த முகாந்திரமும் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தவித கடனையும் வக்பு மூலமாக மத்திய அரசு கொடுக்கவில்லை. வக்பு சொத்துகள் குறித்து மத்திய அரசு தவறாக சித்தரிக்கிறது.
குறிப்பாக திருச்செந்தூர் அருகே ஒரு கிராமம் வக்பு வாரியத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தவறான தகவலை கூறியுள்ளார். மத்திய அரசு தனது தவறை நியாயப்படுத்த முயற்சி செய்கிறது சிறுபான்மையினரை ஒடுக்குவதே மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது.” என நவாஸ் கனி எம்பி தெரிவித்துள்ளார்.