”போக்குவரத்து துறைக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை” - அமைச்சர் குற்றச்சாட்டு!
2015ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் சன்னாசிப்பேட்டை பகுதியில் நடைபெற்ற
முற்றுகையிடும் போராட்டத்தில் அப்போதைய குன்னம் தொகுதி எம்எல்ஏவும் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் கலந்து கொண்ட போது பிரச்சனை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இதில் 9 போலீசார் காயமடைந்தனர். இது குறித்து கடலூர் மாவட்டம் ஆவினங்குடி போலீசார் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உட்பட 8 பிரிவுகளின் கீழ் 37 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர்,” போக்குவரத்து துறையில் வருகின்ற மாதத்தில் 3,200 பேர் பணிக்கு எடுக்கப்பட உள்ளதாகவும் இதன் மூலம் போக்குவரத்து துறை சீரமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர், ”தமிழக அரசு தான் போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்குகிறது என்றும் மத்திய அரசிடமிருந்து போக்குவரத்து துறைக்கு எந்த ஒரு நிதியும் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.