"இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை" - டிடிவி தினகரன் விமர்சனம் !
சென்னை அடையரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கொடியேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனை அடுத்து பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
"அண்ணா முதலமைச்சராக இருந்த போது இரு மொழி கொள்கையை அமல்படுத்தினார். தமிழக மக்களும், தமிழக அரசியல்வாதிகளும் இரு மொழிக் கொள்கையைத்தான் ஆதரிக்கிறார்கள். இந்தியை மத்திய அரசு திணிப்பதாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பொய் பிரசாரம் செய்கின்றனர். தமிழக அரசியலில் ஊழல், அதனால் தான் மத்திய அரசு நிதியை பார்த்து பார்த்து கொடுக்கிறார்கள்.
தேர்தல் இறுதியில் நிறைய மாற்றம் வரும், எங்கள் கூட்டணி வலுவாக இருக்கும். சாதி வாரிய கணக்கிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு தரும். சமூக மக்கள் விரோத திமுகவை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அடியோடு அழிக்கும். தினம் ஒரு கொலை நடக்கிறது, தினம் ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. திமுகவை வீழ்த்துவது தான் எங்களது அரசியல் வியூகம்" என்று தெரிவித்துள்ளார்.