"போர்நிறுத்த ஒப்பந்தம் என்பது தவறானது" - காங்கிரஸ் எம்.பி.மணீஷ் திவாரி பேட்டி!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 4 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதோடு எல்லை பகுதிகளில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் தீவிரபடுத்தியுள்ளது. இதனிடையே, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி எம்.பி. மணீஷ் திவாரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியதாவது,
"இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது தவறான வார்த்தை. ஏன் என்றால் இது போர் இல்லை. பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதில் பாகிஸ்தான் ஈடுபட்டதால் இதற்கு இந்திய தண்டனை கொடுத்தது. இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் ஊக்குவிப்பை அவர்கள் நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "காஷ்மீர் விவகாரம் ஆயிரம் ஆண்டு கால மோதல் இல்லை. அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள எவரேனும் சிலர், அவர்களுடைய அதிபர் டிரம்புக்கு கல்வியறிவு ஊட்ட வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.
78 ஆண்டுகளுக்கு முன் 1947-ம் ஆண்டு அக்டோபர் 22-ல் சுதந்திர காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுத்துள்ளது. அதன் பின், அக்டோபர் 26-ல் மகாராஜா ஹரி சிங்கால் முழு அளவில் இந்தியாவிடம் விட்டு கொடுக்கப்பட்டது. அதில், பாகிஸ்தான் தற்போது சட்டவிரோத வகையில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் பகுதிகளும் அடங்கும்.
இந்த எளிமையான உண்மையை புரிந்து கொள்வதில் என்ன கடினம்? என கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் 3-ம் நாட்டின் தலையீட்டை மீண்டும் நிராகரித்து உள்ள இந்தியா இந்த பகுதி, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று தெளிவாக கூறியுள்ளதாக" தெரிவித்துள்ளார்.