தவெக தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீதான வழக்கு மதுரைக்கு மாற்றம்!
தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு கடந்த 21-ந் தேதி மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் மற்றும் விஜயின் ரசிகர்கள் வந்திருந்தனர. இந்த மாநாட்டின் போது தொண்டர்கள் மத்தியில் விஜய் ‘ரேம்ப் வாக்’ சென்றார்.
அப்போது தவெக தொண்டர்கள் சிலர் விஜயை அருகில் பார்க்க ‘ரேம்ப் வாக்’ மேடையின் மீது ஏறினர். இதனால் ந்விஜயின் பவுன்சர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர். அப்போது மாநாட்டில் நடிகர் விஜயை அருகில் சென்று பார்க்க முயன்ற தவெக தொண்டர் சரத்குமார் என்பவரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி கீழே வீசினர். இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவராவார்.
இதனை தொடர்ந்து த.வெ.க. தொண்டர் சரத்குமார் மற்றும் அவரது தாயார் சந்தோசம் ஆகிய இருவரும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில் புகார் அளித்தனர். திருவாரூர் மாவட்டம திருத்துறை பூண்டி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸ் நிலையத்திலும் அவர்கள் புகார் செய்தனர்.
அந்த புகாரில், “விஜயை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் நான் ஏறினேன். அப்போது என்னை நோக்கி சுமார் 10 பவுன்சர்கள் ஓடி வந்தார்கள். அவர்கள் என்னை கீழே இறங்குமாறு திட்டியும் இடித்து தள்ளியும் தாக்கி கீழே வீசினார்கள்.
தூக்கி கீழே வீசியதில் எனக்கு நெஞ்சுப் பகுதி மற்றும் உடலில் உள்காயம்
ஏற்பட்டது. த.வெ.க. பொறுப்பாளர்கள் என்னிடம் சமரசம் பேசினார்கள். ஆனால் முதல் உதவி சிகிச்சைக்குக் கூட உதவி செய்ய யாரும் வரவில்லை. இது போன்று வேறு யாருக்கும் நடைபெறக்கூடாது என்பதால் குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறேன். தலைவர் விஜய் மீதும், அவர் பாதுகாப்பு பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”
என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து குன்னம் போலீசார் விஜய் அவரின் பவுன்சர்கள் மீது 346/25 யு.எஸ்.
189(2), 296(b), 115(2) பி.என்.எஸ். பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், விஜய் மற்றும் பவுன்சர்கள் மீதான இந்த வழக்கு குன்னம் காவல்
நிலையத்திலிருந்து மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மாநாடு நடந்த இடம் மதுரை என்பதால் வழக்கு கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகிறது.