”அதிமுகவினர் ஆம்புலன்ஸை நிறுத்தியது மனித நேயமற்ற செயல்”- செல்வபெருந்தகை!
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கிற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஆனால் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை கொண்டு திமுகவினர் தொந்தரவு தருவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் இன்று திருச்சி துறையூர் சட்டமன்ற தொகுதியில் பழனிசாமி தன் பரப்புரையை தொடங்கும் நிலையில் கூட்டத்திற்குள் 108 ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அம்புலன்ஸில் நோயாளி இல்லாமல் வந்ததால் ஆத்திரம் அடைந்த அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸை டிரைவரிடம் சண்டையிட்டு நிறுத்திய தாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளா எக்ஸ் பதிவில்,
”இன்று திருச்சி துறையூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கியவர்களை உயிர் காப்பாற்றும் நோக்கில் விரைந்து சென்ற ஆம்புலன்ஸை அஇஅதிமுகவினர் வழிமறித்து தடுத்து நிறுத்திய சம்பவம் மிகக் கடுமையான, மனித நேயமற்ற செயல் ஆகும். அவசர சிகிச்சை பெற வேண்டிய உயிர்களை அரசியல் சண்டை, அல்லது குறுகிய மனப்பான்மையால் தடுக்க முயன்றது மனித நாகரிகத்திற்கே கேள்விக்குறியாகும்.
மனித உயிரை விட அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்த அராஜகச் செயலுக்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன். மனித உயிர் ஆபத்தில் இருக்கும் நேரங்களில் ஆம்புலன்ஸின் சுதந்திர உரிமையைத் தடுக்க நினைப்பது சட்ட ரீதியாகவும் குற்றமாகும். அஇஅதிமுகவினர் செய்த இந்த மிரட்டல் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்"
என்று தெரிவித்துள்ளார்.