"பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செயல் கடும் கண்டனத்திற்குரியது" - செல்வப்பெருந்தகை!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர்கான் முட்டாகி பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செயல் கடும் கண்டனத்திற்குரியது.
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் நாளில், இதுபோன்ற நிகழ்வுகள் இந்திய அரசியலமைப்பு வழங்கும் சம உரிமைக்கும், பெண்களின் அடிப்படை மனித உரிமைக்கும் எதிரானது. பெண் செய்தியாளர்களின் பங்கு, நம் நாட்டின் ஊடக சுதந்திரத்தையும், ஜனநாயகத்தின் வலிமையையும் பிரதிபலிக்கிறது.
பெண்களை விலக்கும் இத்தகைய நிகழ்வுகள், நம் சமூகத்தில் பாலின சமத்துவத்திற்கு எதிரான பின்னடைவை காட்டுகின்றன. பெண்கள் சக்தி என்று பிரதமர் மோடி பேசுவது, வெற்றுக் கோஷம் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. ஒன்றிய பாஜக அரசு உடனடியாக விளக்கம் அளித்து, இனி இப்படியான பாகுபாடுகள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய பெண்களின் குரலை மவுனப்படுத்த முயலும் எந்தச் செயலையும் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்பதையும் இந்தக் கண்டனத்தின் மூலம் வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.