இரண்டாம் கட்ட ‘தவெக கல்வி விருது விழா’ நாளை நடைபெறும்!
தவெக சார்பாக இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நாளை (ஜூலை 3) சென்னை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2024-ம் ஆண்டு நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்ட உள்ளார். முதற்கட்டமாக கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 10 வகுப்பு மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இதில் 800க்கும் மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். தொடர்ந்து 10 மணி நேரம் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. மாணவ மாணவிகளுக்கு வைரத் தோடு கம்மல் மோதிரம் பரிசாக வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நடிகர் விஜய்யின் ‘தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா’ நாளை (ஜூலை 3) திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்திலிருந்து 18 மாவட்ட மாணவ மாணவியருக்கு விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் புதுச்சேரி மாநில மாணவ மாணவியருக்கு விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளன. தவெக தலைவர் விஜய் மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார்.