கோவை சென்றார் தவெக தலைவர் விஜய் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை விஜய் நடத்த உள்ளார்.
அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத் தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதில் ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கு இன்றும், கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான கருத்தரங்கு நாளையும் மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கோவையில் முகாமிட்டு செய்து வருகிறார். கருத்தரங்கில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவரும். நடிகருமான விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வருகிறார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த முகவர்கள் கூட்டத்தில் 7 மாவட்டத்தை சேர்ந்த 16 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாக்குசாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகிறார்கள். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து தவெக தலைவர் விஜய் வாகனத்தில் இருந்து தொண்டர்களை நோக்கி கை அசைத்தார். தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.