இறுதிச் சடங்குக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி! - பிரேமலதா விஜயகாந்த்
இறுதிச் சடங்குக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய தமிழக அரசுக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தேமுதிக பொதுச்செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
விஜயகாந்த் உடல் அடக்கம் செய்த பிறகு அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இறுதிச் சடங்குக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய தமிழக அரசுக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து போலீஸாருக்கும் காவல் அதிகாரிகளுக்கும் ராயல் சல்யூட். இரண்டு நாட்களாக எங்களுடன் இருந்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் , ஓ பன்னீர்செல்வத்துக்கும் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் ஏ.வா. வேலுவுக்கும் பொதுப்பணித்துறைக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராகுல் காந்தி என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் அவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். திரையுலகினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் விஜயகாந்தின் இறுதிச்சடங்கு புள்ளி விவரப்படி சுமார் 15 லட்சம் பேர் வந்துள்ளார்கள். கேப்டன் விஜயகாந்த் கையில் அணிந்திருந்த கட்சி முத்திரை பதித்த தங்க மோதிரத்தை அவர் கையிலே வைத்து அடக்கம் செய்துள்ளோம்.
பொதுமக்கள் மற்றும் நண்பர்களுக்காக கேப்டனுக்கு கட்சி அலுவலகத்திலேயே சமாதி அமைத்து 24 மணி நேரமும் விளக்கு எரியச் செய்து தினமும் மலர் அலங்காரம் செய்யப்படும். தேமுதிக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கேப்டன் விஜயகாந்தை சந்தன பேழைகள் வைத்து அடக்கம் செய்துள்ளோம். கேப்டனின் கனவை நிச்சயமாக நிறைவேற்றுவோம். கேப்டன் இறப்பினால் நான் மிகவும் சோர்வடைந்து காணப்படுகிறேன், பின்னர் வரும் காலங்களில் நான் தெளிவாக வந்து செய்தியாளர்களை சந்திக்கிறேன். இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு,
என்றும் கேப்டன் விஜயகாந்த் வழியில். இவ்வாறு, தேமுதிக பொதுச்செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.