For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமைச்சராகும் நால்வர்! யார் இவர்கள்? முழு விவரம் இதோ!

11:35 PM Sep 28, 2024 IST | Web Editor
அமைச்சராகும் நால்வர்  யார் இவர்கள்  முழு விவரம் இதோ
Advertisement

செந்தில் பாலாஜி உள்பட 4 புதிய அமைச்சர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் அவர்கள் கடந்து வந்த பாதை குறித்த முழு விவரம் குறித்து பார்க்கலாம்.

Advertisement

செந்தில் பாலாஜி

  • 1994 ஆம் ஆண்டு மதிமுக-வில் செந்தில் பாலாஜி அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர்
  • 1996-ல் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி அந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக கவுன்சிலராக தனது தீவிர அரசியல் பயணத்தை தொடங்கினார்.பிறகு திமுகவில் ஏற்பட்ட பிரச்சனையால் 4 ஆண்டுகளுக்கு பின் 2000-ம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் சேர்ந்த சிறிது நாட்களிலையே செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் பொறுப்பு, கரூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், கரூர் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் என பொறுப்புகள் தேடி வந்ததால் அவரது அரசியல் வாழ்க்கை உச்சத்தை நோக்கிச் சென்றது.
  • 2006, 2011, 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011-2015 வரை அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய கட்சிப் பொறுப்புகள் கிடைத்தது. ஆனால் 2015ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். இதனை அடுத்து 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்தார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்க, அடுத்தடுத்து பல்வேறு அரசியல் திருப்பங்கள் அரங்கேறின.

    அப்போது டிடிவி தினகரன் ஆதரவாளராக செயல்பட்ட செந்தில் பாலாஜி, 2017ஆம் ஆண்டு சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து 18 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை அடுத்து 2018ல் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார். பின்னர் 2021 சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் வெற்றி பெற்று மின்சாரத் துறை அமைச்சராக பதவியேற்றார். இதனையடுத்து திமுகவில் முக்கிய நபராக மாறிய செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    அரசியலில் இரண்டாவது சறுக்கலுக்கு பின் மீண்டும் ஏறுமுகமாக இருந்த செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கையில் பெரிய பின்னடைவாக அமலாக்கத்துறை விசாரணை அமைந்தது.

  • அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்ட விரோதமாக பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 471 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 26-ம் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை அடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வந்தவுடன் மீண்டும் அமைச்சராக்கப்படுவார், அதுவும் ஏற்கனவே அவர் வசம் இருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறைக்கே அமைச்சராக்கப்படுவார் என்கிற கருத்து வலுவாக உலவ தொடங்கியது. இதனை மெய்மிக்கும் விதமாக தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஆவடி நாசர்

1980-களில் தி.மு.க. இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் இருந்த காலகட்டத்தில் அன்றைய ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணியில் முக்கிய நிர்வாகியாக ஆவடி நாசர் இருந்ததுடன் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் சுற்றுப் பயணங்களிலும் அவருடன் சென்று கட்சிக்காக பாடுபட்டவர். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆவடி நகராட்சி சேர்மனாக இருந்த ஆவடி நாசர் திருவள்ளூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜனிடம் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்ற ஆவடி நாசர், அடுத்து நடந்த 2021 தேர்தலில் பெரும்பான்மை வித்தியாசத்தில் மாஃபா.பாண்டியராஜனை வீழ்த்தி வென்றார். இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டு தனது அமைச்சரவையில் பால் வளத்துறையை கொடுத்து நாசருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

ஆரம்பத்தில் பால்வளத்துறையில் அதிக கவனம் செலுத்தி வந்த ஆவடி நாசர் அதன் பிறகு அந்த துறையில் நடைபெற்று வந்த பல்வேறு பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணாமல் விட்டதால் ஆவின் நிறுவனம் அதள பாதாளத்துக்கு சென்று விட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.இந்த நிலையில் அமைச்சர் நாசர் மகன் ஆசிம்ராஜாவால் அவருக்கு மேலும் கெட்ட பெயரை உருவாக்கியது. இதன் காரணமாகவே அவர் அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது. இந்நிலையில், சிறிய இடைவேளைக்கு பின் தற்போது மீண்டும் ஆவடி நாசர் அமைச்சராகிறார்.

கோவி.செழியன்

திருவிடைமருதூர் தனி தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கோவி.செழியன். இவர் கடந்த 2011, 2016 மற்றும் 2021 என தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் இதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, முதல் 3 சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் யூனியன் எஸ்.வீரமணி முன்னிலை வகித்தார். ஆனால், 4-வது சுற்று முதல் 26-வது சுற்றுவரை தொடர்ந்து கோவி.செழியன் முன்னிலையில் இருந்து, 10,680 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் திமுகவினர் மகிழ்ச்சியடைந்தனர். மும்முறை வென்றவருக்கு முத்தாய்ப்பாக அரசின் தலைமைக் கொறடா பதவி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது அவர் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சேலம் ஆர்.ராஜேந்திரன்

1985 ஆம் ஆண்டு கட்சியின் தலைவர் மு. கருணாநிதியால் மாணவர் அணி மாவட்ட அமைப்பாளராக சேலம் ஆர்.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். பின்னர் படிப்படியாக உயர்ந்து, 2006 ஆம் ஆண்டு பனமரத்துப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் , 2015 ஆம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் பின் 2015 ஆம் ஆண்டு சேலம் (மத்திய) திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் . 2016 இல் சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 இல் அவர் இரண்டாவது முறையாக சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .சேலம் கல்லூரி மாணவராக திமுகவிற்குள் அடியெடுத்து வைத்த ராஜேந்திரன், பெரிய அளவில் சலசலப்புகளின்றி கட்சியை வழிநடத்திச் செல்லக்கூடியவர் என்று பெயரெடுத்தார். இந்நிலையில், தற்போது அமைச்சர் பதவி அவரை தேடி வந்துள்ளது.

Tags :
Advertisement