திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்!
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் இன்று (டிச.30) காலை நடைபெற்றது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மூலவரான சுப்பிரமணியா், தை மாத உத்திர நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டாா். இதையடுத்து, ஆண்டுதோறும் தை மாத உத்திர நட்சத்திரத்தன்று இக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்று வருகிறது. நிகழாண்டு தை மாத உத்திர வருஷாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.
வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடா்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இரவு சுப்பிரமணியருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. புஷ்பாஞ்சலிக்கு பக்தர்கள் மலர்களை அளிக்கலாம் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் ரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.