மணிப்பூரில் பதற்றம்... துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். மணிப்பூரில் தொடர்ந்து, டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வந்தன. அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலகினார். இதையடுத்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில், அங்கு பல இடங்களில் ஊரங்கு பிறப்பிக்கப்பட்டதுடன், இணைய சேவையும் தடை செய்யப்பட்டது. இதனையடுத்து, மணிப்பூரில் அமைதியான சூழல் நிலவியது. இதற்கிடையே, மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கண்ணன் சிங் உள்பட 6 பேரை மணிப்பூர் போலீசார் கடந்த ஜூன் 7ம் தேதி கைது செய்தனர். இதனை எதிர்த்து மெய்தி மக்கள் போராட்டம், வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் சாலைகளில் வாகனங்களின் டயர்கள், மரப்பொருள்கள், பேருந்துகளை எரித்ததாக கூறப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூரில் 5 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 30) அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காரில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். இறந்வர்களின் 60 வயது மூதாட்டியும் அடங்குவார். இந்த துப்பாக்கிச் சூடு மதியம் 2 மணியளவில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையேயான மோதல் காரணமாக நடைபெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளத்தை போலீசார் இன்னும் வெளியிடவில்லை. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 12க்கும் மேற்பட்ட காலி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.