For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பல்லாயிரம் கோடி மோசடி பணத்தை 9 ஆண்டுகளாக மீட்கவில்லை" - சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்!

அனில் அம்பானி தொடர்புடைய வங்கி கணக்குகளை “மோசடி” என ஸ்டேட் வங்கி வகைப்படுத்தியுள்ளது என்று சு.வெங்கடேசன் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
11:24 AM Jul 22, 2025 IST | Web Editor
அனில் அம்பானி தொடர்புடைய வங்கி கணக்குகளை “மோசடி” என ஸ்டேட் வங்கி வகைப்படுத்தியுள்ளது என்று சு.வெங்கடேசன் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
 பல்லாயிரம் கோடி மோசடி பணத்தை 9 ஆண்டுகளாக மீட்கவில்லை    சு வெங்கடேசன் எம் பி விமர்சனம்
Advertisement

சு.வெங்கடேசன் எம்.பி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (ஆர் காம்) ஸ்டேட் வங்கியிடம் வாங்கிய கடன் குறித்த கேள்வியை (எண் 113/21.07.2025) எழுப்பி இருந்தேன். அதற்கு நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதுரி பதில் அளித்துள்ளார். அந்த பதிலில்,

Advertisement

மோசடி

ரிசர்வ் வங்கியின் "மோசடி இடர் மேலாண்மை" வழிகாட்டல்கள் மற்றும் வங்கியின் இயக்குநரவை வகைப்படுத்தல் கொள்கையின் அடிப்படையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் அதன் பிரதான பங்குதாரர் அனில் அம்பானி ஆகியோரை "மோசடி" என ஸ்டேட் வங்கி 13.06.2025 அன்று வகைப்படுத்தி இருக்கிறது. மும்பை பங்குச் சந்தையின் தகவல் வெளியீட்டு விதிகளின்படி ஸ்டேட் வங்கியின் மோசடி வகைப்படுத்தலுக்கு தான் ஆளாகி இருப்பதை 01.07.2025 அன்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆயிரமாயிரம் கோடிகள்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திடமிருந்து ஸ்டேட் வங்கிக்கு வர வேண்டிய கடன் தொகை மட்டுமே 2227.64 கோடிகள் (வட்டி இதர செலவுகள் 26.08.2016 லிருந்து சேரும்) மற்றும் நிதி அல்லாத வங்கி உத்தரவாதம் 786.52 கோடிகள்.

இப்போது திவால் சட்டம் 2016 நடைமுறையின் கீழான நடவடிக்கைக்கு ஆர்.காம் நிறுவனம் ஆளாகி உள்ளது. கடன் அளித்தோர் குழு அளித்த தீர்வு தீர்மானம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் 06.03.2020 அன்று சமர்ப்பிக்கப்பட்டு அதன் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இது தவிர அனில் அம்பானி மீது தனிப்பட்ட முறையிலும் திவால் சட்டத்தின் அடிப்படையில் ஸ்டேட் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

காலம் கடந்த கதை

ஏற்கனவே ஸ்டேட் வங்கி அனில் அம்பானி தொடர்பான இந்த வங்கி கணக்குகளை 10.11.2020 அன்று மோசடி என்று வகைப்படுத்தி சிபிஐ வசம் 05.01.2021 அன்று புகார் தந்தது. ஆனால் 06.01.2021 தேதியிட்ட டெல்லி உயர்நீதி மன்ற ஆணையின் காரணமாக புகார் திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் 27.03.2023 ஆணையின்படி மோசடி வகைப்படுத்தல் குறித்து முறையிட ஒரு வாய்ப்பு தருமாறு பணிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மோசடி வகைப்படுத்தல் வங்கியால் 02.09.2023 அன்று திரும்பப் பெறப்பட்டது.

மீண்டும் "மோசடி வகைப்படுத்தல்" ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ரிசர்வ் வங்கியின் 15.07.2024 சுற்றறிக்கையின் அடிப்படையில் "மோசடி," என மறுபடியும் வகைப்படுத்தப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு 24.06.2025 அன்று அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. சிபிஐக்கும் புகார் தருவதற்கான தயாரிப்பு நடந்தேறி வருகிறது" என்று அமைச்சர் பதிலில் தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன் கருத்து;

"சாமானிய மக்களின் கடன்கள் என்றால் கழுத்தில் துண்டைப் போட்டு இழுக்கிற வங்கிகள் பெரும் தொழிலதிபர்கள் எனில் கடனை வசூலிக்க எவ்வளவு காலங்கள் ஆகின்றன என்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏதோ தொடர் நாவல் போல 9 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டு கொண்டே போகிறது. வங்கிகளிடம் வாங்கியுள்ள மொத்தக் கடன், வட்டி, செலவுகள் சேர்த்தால் ரூ.31,850 கோடிகள் என்று செய்திகள் கூறுகின்றன.

ஆனால் அமைச்சர் பதில் மூலக் கடனை மட்டுமே பதிலில் குறிப்பிட்டுள்ளார் எனக் கருதுகிறேன். மக்களிடம் மேலும் வெளிப்படையாக அரசு இருக்க வேண்டும். காரணம் இவை எல்லாம் மக்களின் வியர்வை, ரத்தத்தின் விளைபொருளான சேமிப்புகள். சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி பெரும் முதலாளிகள் தப்பிக்க அனுமதிக்க கூடாது. விரைவான நடவடிக்கைகள் தேவை" என்று சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார். இவ்வாறு தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement