தென்காசி முதியோர் இல்ல விவகாரம் – உயிரிழப்புக்கு இதுதான் காரணமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. இதில் 60க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியிருந்தனர். இந்த முதியோர் இல்லத்தில் கடந்த ஜுன் 11ம் தேதி இரவு உணவருந்திய சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (வயது 48), முருகம்மாள் (வயது 45), சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த அம்பிகா (வயது 40) ஆகியோர் கடந்த ஜுன் 12ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையும் படியுங்கள் : அச்சுறுத்தும் கொரோனா… ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு… இந்தியாவில் எத்தனை பேருக்கு பாதிப்பு?
தொடர்ந்து, தனலட்சுமி (70) என்பவர் ஜுன் 13ம் தேதி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில், இடைகால் பகுதியைச் சேர்ந்த முப்புடாதி என்ற முதியவர் கடந்த ஜுன் 17ம் தேதி உயிரிழந்தார். இதற்கிடையே, அந்த முதியோர் காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. தற்போது, 12 பேர் நெல்லை அரசு மருத்துவமனையிலும், 7 பேர் தென்காசி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் காப்பகத்தில் இருந்தவர்கள் சாப்பிட்ட உணவு மற்றும் குடிநீர் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி இருந்தனர். இந்த நிலையில், ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி, அவர்கள் அருந்திய குடிநீரில் ஈ-கோலை எனும் பாக்டீரியா கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியாவால் சிறுநீர் தொற்று அதிகமாக ஏற்படும் எனவும் இந்த தொற்றின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், உடற்கூராய்வு முடிவுகள் வந்த பிறகே உயிரிழப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.