பிரதமரை சந்தித்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி!
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, நிலுவையில் இருக்கும் நிதிப்பகிர்வுகள் குறித்த கோரிக்கை மனுவினை அளித்தார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. இதனைத்தொடர்ந்து தெலங்கானவில் புதிய முதலமைச்சராக ரேவந்த் ரெட்டியும், துணை முதலமைச்சராக மல்லு பட்டி விக்ரமார்காவும் பொறுப்பேற்றனர். இதையடுத்து பிரதமரை சந்தித்து, அவரிடம் மாநிலம் குறித்த பல்வேறு விவகாரங்கள் அடங்கிய மனுவை அளிக்க இன்று நேரம் அளிக்கப்பட்டிருந்தது.
எனவே இன்று மாலை, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் பிரதமரை சந்தித்தனர். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை பிரதமரிடம் இருவரும் வழங்கினர். மாநிலத்தில் மத்திய அரசுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை விரைந்து முடிக்க கோரியும், நிலுவையில் உள்ள திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியை உடனடியாக விடுவிக்க கோரியும் அந்த மனுவில் தெரிவித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 9 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த சந்திரசேகர ராவ், கடந்த செப்டம்பர் மாதம் தான் முதல்முறையாக பிரதமரை சந்தித்து, கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார். அதன் பின்னர் தற்போது புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரேவந்த் ரெட்டி பிரதமரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.