For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை 11.4% அதிகரிப்பு!

10:43 AM Jan 29, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை 11 4  அதிகரிப்பு
Advertisement

கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் 2023 ஆம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் செய்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

விபத்து, புற்றுநோய்,  பிறவி குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்டவையால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு,  அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது.  அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு மாற்று உறுப்புகள்  தேவைப்படுவதன் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பொதுமக்களிடையே சாலை பாதுகாப்புகள் மற்றும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வுகள் இல்லாத காரணத்தால்,  நாள்தோறும் ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது.  இதனால் பெரிய அளவிலான ஆபத்துக்களும், சில சமையங்களில் மூளைச்சாவு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

இதையும் படியுங்கள்; நாளை முதல் அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் - அமைச்சர் சிவசங்கர்!

இதையடுத்து, விபத்துகளில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகள் யாருக்கும் பலனில்லாமல் வீணாகிறது.  உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.  குறிப்பாக தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகத்திற்கு 6,322பேர்,  கல்லீரலுக்கு 438பேர்,  இதயத்திற்கு 76பேர்,  நுரையீரலுக்கு 64பேர், இதயம் மற்றும் நுரையீரலுக்கு 25பேர்,  கைகளுக்கு 27 பேர்,  சிறுகுடலுக்கு 2பேர்,  சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கு 40பேர் காத்திருக்கின்றனர்.  இதேபோல் சிறுநீரகம் மற்றும் கணையத்திற்கு 42 பேர்,  சிறுகுடல் மற்றும் வயிற்றுக்கு ஒருவர் என்று மொத்தம் 7,037 பேர் உடல் உறுப்பு தானம் பெறுவதற்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில்,  கடந்த ஆண்டு (2023), செப்டம்பர் 23ம் தேதி  உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு,  அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.  அதன்படி, மூளைச்சாவு அடைந்த நபர்களின் உறவினர்கள்,  உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்தவுடன், உடல் உறுப்புகள் பெறப்படுகிறது.  தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சரின்  இந்த அறிவிப்பை தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்ததாவது:

"உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இறுதிச்சடங்கின் போது அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.  இதனால், அண்மை காலமாக உடல் உறுப்புதானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  மேலும், பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில்,  2023ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.  தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பு வெளியானது முதல்,  இதுவரை தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்டோரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.  குறிப்பாக, 2024 ஆம் ஆண்டின் இந்த மாதத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்டோரின்  உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.  அதேபோல், 5,000 மேற்பட்டோர் உடல்உறுப்பு தானம் செய்வதற்கு பெயர் பதிவு செய்துள்ளனர்.  கடந்த 2023 ஆம் ஆண்டு 178 பேர் உடல் உறுப்பு தானம் அளித்ததால் 1000 பேர் பயனடைந்துள்ளனர்.  எனவே, உடல் உறுப்பு தானம் அளிக்க பொதுமக்கள் அதிகளவில் முன்வர வேண்டும்" இவ்வாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இணையதளத்தில் பதிவு செய்யலாம்

உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள்,  முதலில் தங்கள் குடும்பத்தினரிடம் தெரிவிக்க வேண்டும்.  பின்னர், தமிழ்நாடு அரசின் www.tnos.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து,  அதற்கான அடையாள அட்டையையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பதிவு செய்து கொள்ளலாம்.  இதில் பதிவு செய்தவர்கள் கண்டிப்பாக உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  உடல் உறுப்பு தானம் செய்தவர் இயற்கையாக இறந்தாலோ அல்லது மூளைச்சாவு அடைந்தாலோ, அவரது குடும்பத்தினர் அனுமதியுடன் மட்டுமே, உடல்உறுப்புகள் தானமாக பெறப்படும் என மருத்துவர்கள் தொரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement